Monday 16 February 2009

ஊருக்குத்தான் உபதேசம்...

சிலம்பாட்டம் படம் வெளிவந்த போது நடந்த சம்பவம் இது.

"லேய் மாப்ளே, சிலம்பாட்டம் படத்துல உள்ள பாட்ட கொஞ்சம் கேளேன், ரொம்ப நல்லா இருக்குது பாட்டு" என்றான் என் நண்பன் வெள்ளையன்.

"டேய் வெள்ள, எந்த பாட்டுல?"

"
நலம்தானா, நலம்தானா..."

பாடலைக் கேட்டேன், பாடியவர் வேறு யாரும் அல்ல, ஊருக்கு உபதேசம் செய்து வரும் பிரபல இயக்குனரும், எதைப் பேசினாலும் அடுக்கு மொழியிலேயே பேச முயற்சி செய்து சொல்ல வந்த கருத்தை மறந்துவிட்டு நகைச்சுவை விருந்து அளிப்பவரும், 'அரட்டை அரங்கம்' என்ற பிரபலமான கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் மிக மோசமாக நடத்தி வருபவருமான விஜய டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசன்தான் அது.

("அதுக்கு இப்ப என்ன?")

பாட்டு உச்சரிப்பில், தமிழ் மொழியை தமிழ் தெரிந்த தமிழர் சிலம்பரசன் கொலை செய்திருக்கிறார்.

"லேய், வெள்ள பாட்ட கேட்டேன்டா,
"நலம்தானா, நலம்தானா, உடலும் உல்லமும் நலம்தானா?" ன்னு வருது, தமிழ் தமிழ்னு பேசுறவங்க வீட்டுலயே இப்படி ஒருத்தன் இருக்கான் பாரு!" என்றேன்.

"பாட்டு நல்லா இருக்குதுன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, உன் இஷ்டத்துக்குப் பாட்ட குறை சொல்லிட்டு இருக்கா, என்னடே?" என்றான் வெள்ள.

"பாட்ட குறை சொல்லலடா வெளக்கெண்ணை, அந்த பாட்டு நல்லாத்தான் இருக்கு. பாட்டுக்கான நடனமும் நல்லாத்தான் இருக்குது; ஆனா உச்சரிப்பு? அதுல வர்ற உச்சரிப்பைக் கவனி. நடனம் ஆடுறதுல செலுத்துற கவனத்த பாடுறதுலயும் காட்டலாமில்லையா?"

"ஏய், இப்பல்லாம் எல்லாருமே அப்படித்தானப்பா பாடுதானுவ, நீ என்னவோ சிலம்பரசன் மட்டும்தான் அப்படி பாடுறதா சொல்லுதா?"

"லேய், தமிழ் தெரியாதவன் தப்பா படிச்சா கூட சும்மா விட்டுடலாம்டா, ஆனா வேணுமின்னே வித்தியாசமா இருக்கட்டும்னு தப்பு தப்பா படிக்கிரவனுவள என்ன சொல்றது? முந்தில்லாம் கே.ஜே. ஜேசு தாஸ், 'ல', '' உச்சரிப்பு தெரியாம படித்த காரணத்தால் அதை திருத்தி ஒழுங்காக பாடச் சொன்னதால, ஜேசு தாஸ்க்கும் தனக்கும் கருத்து வேறுபாடு உண்டானதா கவிஞர் வைரமுத்து, 'பாட்டு பட்ட பாடு' ன்னு ஒரு நிகழ்ச்சியில சொல்லி இருக்காரு." என்றேன் நான்.

"அப்படியா! எப்போ?"

"ஒரு இருபது வருசத்துக்கு முன்னாடி, 'நீங்கள் கேட்டவை'ன்னு ஒரு படம், தியாக ராஜன் நடிச்சது. அதுல 'பிள்ளை நிலா, இரண்டும் வெள்ளை நிலா' ன்னு பாடுரதுக்குப் பதிலா 'பில்லை நிலா இரண்டும் வெள்ளை நிலா'ன்னு பாடியிருப்பார் ஜேசு தாஸ்
"ஒரு மலையாளத்து பாடகர் தமிழ் நல்லா உச்சரிக்கணும்னு, வைரமுத்து போன்றவர்கள் நினைக்கும் போது, ஊரு நியாயம் பேசிட்டு அலையுற டி.ராஜேந்தர் மகன் ஒழுங்கா தமிழ் உச்சரித்துப் பாடக் கூடாதா என்ன?"

"லேய், கண்ணேதிரே தோன்றினாள் படத்துல கூட ஒருத்தரு இப்படி பாடி, அர்த்தத்தையே மாத்திட்டாரு...பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்பதை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று பாடிவிட்டார் பாடகர், தெரியும்லா?

"அது தெரியும், ஆனால் அந்த பாட்ட படிச்சவன் ஒண்ணும் தமிழன் கிடையாது."

"அது இருக்கட்டும், டி.ராஜேந்தர் எங்கடே ஊர் நியாயம் பேசிட்டு அலையுறாரு?"

"அரட்டை அரங்கத்துல ஊரு நியாயம் பேசாம வேற என்ன பண்றாராம்; அது மட்டும் இல்ல நாலஞ்சி வருசத்துக்கு முன்னாடி விஜய் டிவியில நியாயம் என்றும் சொல்வேன்னு ஒரு நிகழ்ச்சி நடத்துனாரு".

"அதுக்கு சம்பளம் கொடுக்குறாங்க அதனால பேசுறாரு."

"அப்படியா, சரி விடு. போன வருசம், சினிமா சம்பந்தமான ஒரு விழாவுல நடிகை த்ரிஷா ஆங்கிலத்துல பேசியதைக் கண்டு, அனைவர் முன்னிலையிலும்
'நீ தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்த பெண்தானே, உனக்கு தமிழ் தெரியாதா?....'என்று பொங்கி எழுந்து அழ வைத்தவர் டி.ராஜேந்தர், இது தெரியுமா உனக்கு. இது சம்பளத்துக்காக பேசிய பேச்சா, உண்மையிலே தமிழ் மீது கொண்ட அக்கறையினால் பேசிய பேச்சா அல்லது தான் ஒரு தமிழ் உணர்வாளன் என்று காட்டிக் கொள்வதற்காக போட்ட வேசமா?"

"ஏய், அரசியல்வாதிகள் என்னக்குப்பா ஒழுங்கா இருந்துருக்காங்க?...அவங்க பண்ணுறதெல்லாம், 'ஊருக்குத்தான் உபதேசம்'ங்குற கதைதான்.."

குமுதத்தில் அரசுவின் உளறல்கள்....

கடந்த வாரம் குமுதம்(11-2-2009) இதழில், கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி.

இந்தியாவில் தோன்றிய சிறந்த அரசியல் தலைவர்களின் டாப் 10 லிஸ்ட் தாருங்களேன்?

கேள்வி கேட்டவர்: ஏ.எஸ். யோகானந்தம், ஔவையார்பாளையம்.

அரசுவின் பதில்: 1. மகாத்மா காந்தி 2. ஜவஹர்லால் நேரு 3. டாக்டர் அம்பேத்கர் 4. சுபாஷ் சந்திர போஸ் 5. பெரியார் 6. .எம்.எஸ். நம்பூதிரிபாட் 7.ஜெயபிரகாஷ் நாராயணன் 8. வி.பி. சிங். இதற்கு மேல் தேறவில்லை.

பதில் கூறவேண்டியவன் யோக்கியனாக இருந்தால் பத்துபேருடைய பெயரை கூறி இருக்க வேண்டும் அல்லது அந்த கேள்வியை குப்பை கூடைக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அரசு என்ற பெயரில் இருக்கும் ஆசாமி என்ன செய்கிறார் தெரியுமா? வேண்டும் என்றே ஒரு எட்டு தலைவர்களுடைய பெயரை மட்டும் கூறிவிட்டு,"இதற்கும் மேல் தேறவில்லை" என்கிறார்.

'இந்த மாதிரி பதில் சொன்னால் குறிப்பிட்ட சில கட்சிகளை சேர்ந்த தொண்டர்களோ அல்லது அந்த தலைவர்கள் பிறந்த சமுதாயத்தை சார்ந்தவர்களோ கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அதன் மூலம் பத்திரிகையின் பெயர் வெளிப்படும், தங்கள் பத்திரிகைக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும்' என்பது அவருடைய எண்ணம். இது நமக்கும் தெரியும்.
(அது போலத்தான் நடந்தது, நாடார் சங்கத்தினர் பலர் இதனைக் கண்டித்து சிறை சென்றனர்)


எவ்வளவு மோசமான புத்தி பாருங்கள். நாட்டின் பெருந்தலைவர்களை இப்படியா அவமதிப்பது.
அரசு போன்றவர்கள் இதுபோல எழுதுவதால் காமராஜர் என்னும் பெருந்தலைவர், ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மாற்றப்படுகிறார்.
(நாடார் சங்கத்து காரங்க கண்டனம் பண்ணினாலே, அவர் ஒரு ஜாதித் தலைவராக மாற்றப்படுகிறார் என்றுதானே அர்த்தம், வேறு யாரும்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே)

சிறந்த தலைவர் என்பதற்கு அரசு வைத்திருக்கும் வரையறை என்னவோ? நமக்கு தெரியாது. ஆனாலும் எந்த வரையரைப் படி பார்த்தாலும், தேறவில்லை என்று சொல்வது அரசுவின் உளறல் அல்லாமல் வேறென்ன?



Sunday 15 February 2009

சூயிங்கத்தை இங்கே துப்பாதீர்...

இரண்டு நாட்களுக்கு முன்பு 'வெண்ணிலா கபடி குழு' படம் பார்ப்பதற்காக சென்னை-திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டருக்கு சென்றிருன்தேன். முந்திய காட்சியை காண வந்த கழுதை ஓன்று சூயிங்கத்தை மென்றுவிட்டு இருக்கையின் கைப்பிடியில் ஒட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டது. நான் இருக்கையில் அமர்ந்த போது என் கையில் ஒட்டுகிறது அந்த எச்சில் சூயிங்கம்.

இது போல் கழுதைகளை பல முறை பார்த்தாகிவிட்டது. அதனால்தான் இப்போது இதுகுறித்து எழுதவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

ஒரு முறை எங்கள் கல்லூரியில் இது போலத்தான், ஒருத்தன் சூயிங்கத்த தின்னுட்டு அத டெஸ்க்ல ஒட்டி வச்சான். அத நான் பார்த்துட்டேன் . உடனே
"டேய், ஏண்டா இந்தமாதிரி சின்னத்தனமா நடந்துக்கிற?" என்றேன்.
"என்ன?" ன்னான்.
"சூயிங்கத்த ஏன் டெஸ்க்ல ஒட்டுன?" என்றேன்.

உடனே அவன் "ஏன், சூயிங்கத்த நான் எங்கே ஒட்டிவச்சா உனக்கு என்னல?" என்றான்.

"நீ சூயிங்கத்த ஒட்டணும்னா, உன்னோட வீட்டுல போயி நல்லா ஒட்டு, இங்க ஒட்டுனா அர விழும் அவ்வளவுதான்" என்றேன்.
பின்பு டெஸ்க்ல ஒட்டி இருந்த சூயிங்கத்தக் கொண்டு குப்பத் தொட்டியில கொண்டு போடச் சொன்னேன், போட்டான்.

இன்னொரு சம்பவம்.

அது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான அச்சு சரிசெய்யும் நிறுவனம். அயல்நாட்டு அச்சு நிறுவனங்களின் வேலையை பெற்று அச்சு செப்பனிட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவார்கள். அங்கே ஆயிரம் பேருக்கு அதிகமானோர் வேலை செய்கின்றனர். அங்கு உள்ள பணியாளர்களுள் சிலர் (படித்த அறிவிலிகள்) சூயிங்கத்த தின்றுவிட்டு வாஷ் பேசின்லயோ அல்லது கழிவறையில் உள்ள யூரினரி குழாய்களிலோ போட்டுட்டு போய்விடுவார்கள். ஆனா அத சுத்தம் பண்ண வருகிற துப்புரவுத் தொழிலாளிகள்தான் பாவம், அந்த குழாய்களிலோ அல்லது வாஷ் பேசின்லயோ ஒட்டப்பட்ட சூயிங்கத்த எடுப்பது கையால் தான் எடுத்தாக வேண்டும்.
தொடர்ந்து இது போல் நடந்ததால் கழிவறையின் வாசலில் போர்டே வைத்துவிட்டார்கள் "தயவு செய்து சூயிங்கத்தை தின்று விட்டு இங்கே துப்பாதீர்கள்" என்று.

அட, படித்தும் அறிவு கெட்ட கழுதைகளே, உங்களுக்கே புத்தி வேண்டாமா?
(இதை படிக்கின்ற அனைவரையும் திட்டுவதற்காக அல்ல, மேற்படி காரியங்களை செய்கிறவர்களுக்கு மட்டும்).

கண்ட கண்ட பாக்குகளை சவித்துவிட்டு கண்ட இடங்களில் துப்புவது, புகையிலைகளை சவித்து துப்புவது, இன்னும் பல சொல்லலாம்.

இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை காணும் போது நாட்டில் நிறைய பைத்தியக்காரர்கள் இருப்பது போல தெரிகிறது.
கல்லூரி வரை சென்று வந்த பட்டதாரிகளிலேயே சில அறிவிலிகள் இருக்குதுன்னா படிப்பறிவே இல்லாத மக்களை எப்படி திருத்துவது?